தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று இரான் நாட்டின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா பிபிசியிடம் கூறினார்.
இரான் மீதான தடைகள், புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் நாட்டை முடக்குவதாக அவர் தெரிவித்தார்.
உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது இரான். ஆனால், அது 2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேராத சில நாடுகளில் இரானும் ஒன்று.
புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் சரிந்துவிட்டதால், சமீப ஆண்டுகளில் அந்நாட்டில் கார்பன் உமிழ்வு அளவு அதிகரித்துவிட்டது.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை ஒட்டி நடந்த மக்கள் போராட்டங்களை அந்நாடு கடுமையாக வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கிவிட்டது.
கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாட்டுக்கு அந்நாட்டின் அதிபர் எப்ராஹிம் ரயீசி நேரில் வரவில்லை. ஆனால், இரான் சார்பாக மாநாட்டுக்கு வந்திருக்கும் குழு தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் கோருகிறது.
“உலகின் வேறு எந்தப் பகுதியையும் போலவே இரானும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் சாலாஜெகா.
“பருவநிலை மாற்றம் வருடாந்திர மழைப் பொழிவை குறைத்துள்ளது. எங்கள் ஆறுகளுக்கு வரும் நீரின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், எங்கள் விவசாயம், எங்கள் தொழில்துறை, குடிநீர்த் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.
ஆனால், 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியும், 700க்கு மேற்பட்ட அணைகளைக் கட்டியும் தங்கள் தண்ணீர் ஆதாரங்களை தாங்களே நாசம் செய்துகொண்டதாக இரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றிக் கூறும் சாலாஜெகா, அது இருவழிப் பாதையாக இருக்கவேண்டும் என்கிறார்.
“ஒடுக்குமுறை தன்மையுள்ள தடைகள் அமலில் உள்ள நிலையில், எந்தவிதமான இறக்குமதியும் செய்ய முடிவதில்லை. அடிப்படை மனித உரிமையான மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை,” என்கிறார் அவர்.
“தடைகள் நீக்கப்பட்டால் சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள். அந்த சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எங்களுக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் நவீன தொழில்நுட்பத்தையும், நிதியையும் எங்களுக்கு அனுப்ப முடியும். இதனால் எங்களால் எங்கள் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்,” என்று பிபிசி நியூசிடம் அவர் கூறினார்.
தங்கள் மீதான தடைகள் நீக்கப்படாவிட்டாலும், கார்பன் உமிழ்வு குறைக்கப்படும் என உறுதியளித்ததாக அந்நாடு முதலில் கூறியது.
ஆனால் எதார்த்தம் சற்று வித்தியாசமாக உள்ளது, உண்மையில் கார்பன் மாசுபாடு அதிகரித்துள்ளது. மேலும் அந்நாடு காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கைகளை எடுக்கமுடியாத நாடாக உள்ளதாக ‘கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர்’ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
2015ம் ஆண்டு முதல் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தை இரான் சமர்ப்பிக்கவில்லை. 2030 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் உமிழ்வு 50 சதவீதமாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தடைகள் நீக்கப்பட்டால் 12 சதவீத கார்பன் உமிழ்வைக் குறைப்போம் என்று கூறினோம். தடைகள் நீக்கப்படவில்லை,” என சாலாஜெகா கூறினார்.
மரபுசார் எரிபொருட்களான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை பெருமளவில் சார்ந்திருக்கும் ஒரு நாடாக உள்ள இரான், புதைபடிம எரிபொருட்களுக்கான தேவை குறைந்து வரக்கூடிய உலகை எவ்வாறு சமாளிக்கும்?
“எண்ணெய் மற்றும் எரிவாயு ஒரு நாள் முடிவுக்கு வரும், ஆனால் குறைவாக கார்பன் உமிழ்வு ஏற்படும் வகையில் பயன்படுத்தினால், அதையும் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களையும் பயன்படுத்தலாம்” என சாலாஜெகா கூறினார்.
உலக அளவில் பிற நாடுகள் கார்பனை குறைப்பது மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதி திரட்டுவது குறித்து காலநிலை மாநாட்டில் விவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், இரானுடன் இது தொடர்பாக விவாதிக்க குறைவாகவே வாய்ப்புகள் உள்ளன.
இரான் நாட்டின் பிரதிநிதிகள் பொருளாதாரத் தடை தொடர்பாக ஒரு கருத்தை தெரிவிக்க இங்கு வந்துள்ளனர்.
தற்போது, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இரான் நாடு சேர்ந்து பங்களிக்க முடியாது என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இரான் இதை மாற்ற விரும்புகிறது.
“இரான் முழு உலகத்துடனும் தொடர்பிலுள்ள ஒரு தேசம் என்பதை உரக்கச் சொல்ல நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாம் அனைவரும் இந்த உலக கிராமத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடியும்” என்று இரான் நாட்டின் தூதுக்குழுவின் தலைவர் கூறினார்.
“எங்களைத் தடுத்து வைத்திருக்கும் ஒரு பொருளாதார பயங்கரவாதம் உங்களிடம் இருக்கும்போது, அதை நீக்குங்கள், எங்களால் உலக நாடுகளோடு இணைந்து செயல்பட முடியும்” என்று கூறினார்.
THX-BBC