நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் என பலரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் மணிகண்டன் ஏற்று நடித்த ‘ராஜாகண்ணு’ கதாபாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.
படத்தின் தாக்கம் குறித்தும், ‘ராஜாகண்ணு’ கதாபாத்திரம் எந்த மாதிரியான அனுபவம் கொடுத்தது, தற்போது ‘ஜெய்பீம்’ படத்திற்கு வந்திருக்கும் நெருக்கடி, அடுத்த கட்ட பயணம் என பல விஷயங்கள் குறித்து நடிகர் மணிகண்டன் பிபிசி தமிழுடனான பேட்டியில் பகிர்ந்தார். கலந்துரையாடலில் இருந்து,
‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு முன்பும் பின்பும் என உங்களுடைய சினிமா பயணம் எப்படி இருக்கிறது?
“‘ஜெய்பீம்’ படத்திற்கு பின்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்புணர்வு கூடியிருக்கிறது. அதை நான் சரியாக எடுத்து வேலை செய்வேனா என்பது தெரியவில்லை. ஆனால், என்னுடைய நண்பர்கள் என் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று, கதைகளை தேர்ந்தெடுக்க சொல்லி அறிவுறுத்துகின்றனர். அது எப்படி செய்ய போகிறேன் என்பது தெரியவில்லை. ஏனெனில், சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் சில படங்கள் நடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இன்னொன்று, நடிகன் என்பதையும் தாண்டி மனிதனாக சில நேர்மையான படங்கள் நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு”.
‘ஜெய்பீம்’ படத்துக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் குறிப்பிட்ட சாதியை தவறாக சித்தரித்திருப்பதாக படத்திற்கு வரக்கூடிய எதிர்ப்பு, நெருக்கடிகள் இதை எப்படி பார்க்கறீர்கள்? சக கலைஞனாக நடிகர் சூர்யாவிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
“இது குறித்து படத்தின் இயக்குநர் ஞானவேல் பல பேட்டிகளிலும், மேடைகளிலும் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட நோக்கத்தில் ஒருவர் பற்றி தவறாக சித்தரித்தோ அல்லது அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ காட்சிப்படுத்தி இந்த படத்திற்கான புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை. இவ்வளவு நல்ல கதை எடுத்துவிட்டு, அதை நம்பாமல் இது போன்ற விஷயங்களை நாங்கள் நம்புகிறோமோ என்றால் நிச்சயம் ஏற்று கொள்ள மாட்டோம்.
இதையும் தாண்டி, எனக்கும் தனிப்பட்ட முறையில் இயக்குநரை தெரியும். யாரையுமே கடிந்து ஒரு சொல் சொல்ல மாட்டார். அவரது உதவி இயக்குநரை கூட இதுவரை ஒரு வார்த்தை கடுமையாக சொல்லி நடத்தியது இல்லை. அப்படி இருக்கும்போது, படத்தில் தெரிந்தோ தெரியாமலோ அப்படி வைத்திருந்தாலும் அதனை தவறு என சுட்டிக்காட்டியதும் திருத்தி இருக்கிறார்கள். ஒருவேளை அது தெரிந்து வைத்திருந்தால், அதை சொல்லியே ஆக வேண்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதற்காக அவர் உறுதியாக நிற்க கூடிய நபர்தான். ஆனால், அது அவருடைய நோக்கம் இல்லை என்பதால்தான், சுட்டிக்காட்டியதும் உடனே அதை மாற்றி விட்டார்.
ஆனால், இந்த படத்தில் வேறு ஒரு வலியை பதிவு செய்திருக்கும்போது அதை கவனிக்காமல் இப்படியான ஒரு விஷயத்தில் இந்த படத்தை திசை திருப்புவது வருத்தமாகதான் உள்ளது. இந்த விஷயத்தில் சூர்யா சாரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், ‘கவலைப்படாதீர்கள், நிச்சயம் நாங்கள் உங்களுடன் இருப்போம்’ என்பதுதான்” .
“தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல் கட்டமாக பூஞ்சேரி கிராமத்தில் உள்ள குறவர்/ இருளர் இன மக்களுக்கு நிலப்பட்டா, சாதிச்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் படிக்க இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு இது கிடைக்கிறது. சமீபத்தில் அஸ்வினி அவருடைய வீடியோ பார்த்து இருப்பீர்கள். அவர்கள் இன மக்களுக்கு கல்வி கிடைக்க போகிறது என்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்திருப்பார்.
‘ஜெய்பீம்’ படத்தை முதல்வர் பார்க்கிறார். அதற்கு பிறகு, அந்த தாக்கத்தினால் அது நடக்கிறது என்பதாக இருந்தால் கூட இதைத்தாண்டி, பொதுச்சமூகம் இந்த படத்தை எப்படி ஏற்று கொண்டார்கள் என்பது மிகப்பெரிய சந்தோஷம். ஏனென்றால், இந்த படத்தை ஒரு முறைக்கு மேல் யாரும் பார்க்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், பார்த்தவர்கள் எல்லாம் நான்கைந்து முறை பார்த்தேன், குழந்தைகளுடன் பார்த்தேன், அவர்களுக்கும் படம் மிகப்பிடித்திருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். இது எனக்கு உணர்த்துவது என்னவென்றால் மக்களுக்கு ஒற்றுமையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்போது தப்பு மக்கள் மீது இல்லை. வேறு எங்கையோதான் இருக்கிறது”.
“இல்லை, நான் பார்க்கவில்லை. ஆனால், முதலில் நிஜ கதைமாந்தர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நிஜத்தில் அவர்கள் என்ன மாதிரியான சூழலை சந்தித்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இருந்தது. ஆனால், அப்போது எங்களால் போக முடியவில்லை. மற்றொன்று, கதையில் பார்வதியின் கதாபாத்திரமான செங்கேணியில் சில புனைவுகள் இருந்ததால் அதற்கேற்றாற்போல லிஜோ வேறு கற்பனை கதாபாத்திரமாக தன்னை உருவகித்து அதற்கேற்ற பயிற்சியில் இருந்தார். அதனால், நிஜ கதைமாந்தரை சந்தித்து லிஜோவின் அந்த பயிற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என இயக்குநர் எண்ணினார். அதனால், சந்திக்கவில்லை. பிறகு படம் முடிந்ததும் நாங்கள் அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டோம். நிஜ பார்வதி சில பேட்டிகள் மூலம்தான் எனக்கும் அறிமுகமானார்”.
“இந்த படத்தில் நான் உதவி இயக்குநருக்குரிய எல்லா வேலைகளையும் செய்திருப்பேன். இந்த படத்தில் என்றில்லை. நான் வேலை செய்யும் எல்லா படங்களிலுமே உதவி இயக்குநராக எல்லா வேலைகளையும் செய்வேன். ‘ஜெய்பீம்’ போல ஒரு நல்ல சினிமா உருவாகிறது என்றால் அதில் நம்மால் முடிந்த பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
இந்த படம் ஆரம்பிக்கும்போதே திரைக்கதைக்கான கலந்துரையாடலில் இயக்குநர் எங்களிடமும் கருத்து கேட்டார். இந்த கதை பொறுத்தவரை நான் வியந்த ஒரு விஷயம் என்னவென்றால், உண்மைகளை கோர்வையாக சொல்வது என்பது மட்டுமே நல்ல படமாக வந்துவிடாது. நடந்த நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக தைப்பது என்று ஒரு விஷயம் இருக்கிறதல்லவா? உண்மைகளை, உணர்ச்சிகரமாக சினிமாவுக்கு ஏற்ற கமர்ஷியல் தன்மையுடன் கொடுப்பது என்ற விஷயங்கள் எல்லாம் வேறு வேறு. தண்ணீர் எண்ணெய் போன்று இது எளிதில் சேராது. ஆனால், இதை இயக்குநர் ஞானவேல் அழகாக கையாண்டிருக்கிறார்.
இதை மெருகேற்றுவதற்கான வேலையை நாங்கள் கலந்துரையாடலில் செய்து கொண்டே இருந்தோம். இதில் என் பங்களிப்பு பெரிதாக இல்லை என்றாலும், காட்சிகள் அதில் மாற்றங்கள் செய்வது குறித்து என்னிடமும், அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படையாகவே இருந்தார். இது படத்தின் இறுதிக்கட்டமான எடிட்டிங் வரையிலும் தொடர்ந்தது. அனைவரிடமும் கருத்து கேட்டு இறுதியில் முடிவு எடுக்கக்கூடிய ஒரு நபராகதான் இயக்குநர் இருந்தார்”.
“நிச்சயம் கிடையாது. அந்த காட்சிகளை பார்க்கக்கூடிய பார்வையாளர்களுக்குதான் அது சோகம். ஆனால், நாங்கள் அந்த வலி மறக்க அதை மிகப்பெரிய காமெடி காட்சியாக மாற்றி சிரித்து விடுவோம். இந்த காட்சிகளில் எங்களை விட அதிகம் வலியை அனுபவித்தது தமிழ் அண்ணன்தான். ஏனென்றால், நாங்கள் அடி வாங்கிவிட்டு வந்தால் கொஞ்ச நேரத்தில் அது சரியாகிவிடும். ஆனால், அவர் மனதளவில் குற்றவுணர்ச்சிக்கு போய் விட்டார். படத்தில் அடித்துவிட்டு லிஜோ, மொசக்குட்டி அண்ணன், என்னிடம் என எங்களை நலம் விசாரித்து கொண்டே இருப்பார்” என்றவரிடம் படம் முடித்துவிட்டு அவரது நடிப்பிற்கு என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தது என கேட்டோம்.
“‘படம் பார்த்துவிட்டு என்னை பயங்கரமா திட்டறாங்கடா! தூங்க முடியலை’ என சொன்னார். ‘அதுதான் உங்கள் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி’ என சொன்னேன். படம் நடிக்கும்போதே எங்களோடு புகைப்படம் எடுத்து கொண்டார். ‘படம் வெளிவந்ததும் என்னை எப்படியும் சும்மா விடமாட்டார்கள். நான் உங்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன், என ஒன்றுக்கு மூன்று புகைப்படங்கள் எடுத்து கொண்டார். ‘என் அன்பு தம்பி, தங்கையுடன் படப்பிடிப்பு முடிந்ததும் புகைப்படம்’ என அப்போதே புகைப்படத்தின் தலைப்பையும் சொல்வார்”.
THX-BBC